Wednesday, April 5, 2017

கோடை விடுமுறை குழந்தைகளுக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்தான் பெண்களே..!



பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், 'அப்பாடா' என ரிலாக்ஸ் ஆவது குழந்தைகளை விட அவர்களின் அம்மாவும்தான். ஏனெனில், பள்ளி நாட்களில் காலையில் குழந்தையை எழுப்பி, ஹோம் வொர்க் செய்யவைத்து, டிபன் செய்து, பள்ளிக்கு அனுப்பி, மாலையில் அவர்களை அழைத்து வந்து, ஸ்கூல் டைரியில் ஆசிரியர் எழுதி தந்தவற்றைப் படிக்க வைத்து, சீருடைகளைச் சலவைச் செய்து, சீக்கிரமே தூங்க வைப்பதற்குள்... ஒருநாளை கடப்பது பெண்களுக்கு எளிதல்லவே... அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் இரட்டைச் சுமைதான்.

குழந்தைகள் தங்களுக்கு விடப்படும் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம் என்பதற்கு பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள். அவர்களைப் போலவே பெண்களும் கோடை விடுமுறையை செலவழிக்க திட்டம் தீட்டிக்கொள்ளலாமே... 'குழந்தைகள் படிக்கிறார்கள் அவர்களுக்கு விடுமுறை என்பது சரி. நாங்கள் என்ன படிக்கிறோமா?' என்ற கேள்வி சில பெண்களுக்கு எழலாம். சில விஷயங்களை யோசித்துப் பாருங்கள்.

நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தன்று உங்கள் மகனுக்கு செய்முறை தேர்வு. அதனால், திருமணத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். கிராமத்தில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோதுகூட பணம் அனுப்ப முடிந்ததே தவிர, அருகில் இருந்து ஒருவாரம் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று கவலையும் இருக்கும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அவற்றையெல்லாம் சரி செய்யும் விதத்தில் திட்டமிடுங்கள்.

தங்கள் திருமணத்திற்கு வர வில்லையே என உங்கள் மீது வருத்தமாக இருக்கும் உறவினர் வீட்டுக்கு திடீர் விசிட் அடியுங்கள். எதிர்பாராத பரிசு பொருளை அளியுங்கள்.

கிராமத்தில் இருக்கும் வயதான பாட்டி, தாத்தாக்களுடன் நிதானமாக சில நாட்களைச் செலவழியுங்கள். அவர்களுக்கு மருத்துவத்தை விடவும் அன்பான உறவுகள் அருகில் இருப்பதே மகிழ்ச்சியைத் தரும்.

   

இவை போன்ற சூழல் சிலருக்கு நேராமல் இருந்திருக்கலாம். மேலும், உறவுகளை தகவமைப்பு மட்டுமேதான் பெண்கள் வேலை என்று ஒதுக்கி விட முடியாதுதானே. பெண்களுக்கு என்றும் சில விருப்பங்கள் இருக்கும். அவற்றை இந்த விடுமுறைக் காலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும்போது ஆங்கிலம் பேசத் திணறியப் பழக்கம் இப்போது வரை சில பெண்களுக்கு இருக்கக்கூடும். அதனால், பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் பேரன்டிங் மீட்டிங்கில் பேசுவதற்கு தயக்கம் காட்டுவர். இந்த இரண்டு மாதங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புக்குச் செல்லலாம். தன் தயக்கத்தை உடைத்து வெளியே வரலாம்.

ஆங்கிலம் அல்லாது வேறு மொழி கற்றுக்கொள்ளும் ஆர்வம் சிலருக்கு இருக்கலாம். அதற்கான பயிற்சி நேரம் காலை, மாலை என பிள்ளைகளின் பள்ளி நேரத்தை ஒட்டியே இருப்பதால் தங்கள் ஆர்வத்திற்கு அணை போட்டிருப்பர். இந்த விடுமுறை நாட்களை புதிய மொழியைக் கற்றுக்கொள்ள பயன்படுத்தலாம்.

ஏதேனும் இசைக் கருவி இசைக்கப் பழக, ஓவியம் வரைய உள்ளிட்ட தனித்திறன் பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள பெண்கள் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்களைப் போல பெண்கள் தங்கள் நட்பைத் தொடர முடிவதில்லை. முகநூல், வாட்ஸ் அப் என தொடர்பில் இருந்தாலும் முகம் பார்த்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஏதேனும் ஓர் இடத்தில் பழைய கதைகளைப் பேசுவதுபோல ஆகாது. அந்த ஆசைகளை நிறைவேற்றும் மாதங்களாக ஏப்ரல், மே அமையட்டும்.

பெண்களில் பலருக்கும் சுய தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வேலைக்குச் செல்லும் இடங்களில் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகம் இருக்கும். லாபம் தரும் சுய தொழில் செய்ய தெரிந்தும், அதற்கான ஆயத்தப் பயிற்சிகளுக்கு நேரம் கிடைக்காமல் இருப்பர். அவர்கள் இந்தக் கோடை விடுமுறை காலத்தை முறையாக பயன்படுத்தி, சுய தொழிலில் இறங்க முதல் அடியை எடுத்து வைக்கலாம்.

பல ஆண்டுகளாக செல்ல நினைத்த சுற்றுலா தளங்களுக்குச் செல்லுங்கள். தங்களுக்கான வலிமையை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திகொள்ளுங்கள் பெண்களே.

No comments: