Saturday, April 8, 2017

அட...தூக்கம் இவ்வளவு அவசியமா..!



மகிழ்ச்சியான ஒரு மனநிலையில், சாலையில் நடந்து செல்லும் பெயர் அறியா மனிதர்கள் மீதும் பிரியம் ததும்புகிறது. திடிரென நம் வண்டியின் குறுக்கே யாரேனும் ஓடிவந்தாலும் “இது சகஜம்தானே” எனப் புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறது.நண்பர்களின் அழகு ரசனையை ரசிக்கவும், உணவின் சுவையை ருசிக்கவும் முடிகிறது.அன்றைய தினம் மகிழ்ச்சியால் நிரம்புவதற்கான தொடக்கப்புள்ளியாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது நம்மை அடுத்தடுத்த நல்விளைவுகளை நோக்கித் தள்ளிச் செல்கிறது. இப்படி நம் மனதையும் உடலையும் நல்லனவற்றை நோக்கி செலுத்துவது ஏதோ ஒரு மாயசக்தி அல்ல; அது ஒரு பயிற்சி

தீப்பெட்டியில் தூக்குச்சியை உரசிப் பற்றவைப்பதற்கே நேர்த்தியான பயிற்சி தேவைப்படுமெனில், மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கவும் பயிற்சி தேவைதானே!

நம் உடலையும் மனதையும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அடிப்படையான சில வாழ்முறை மாற்றங்கள் அவசியம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் பார்க்கும் எல்லோமும் ஆரோக்கியமாக தெரியும். எப்போதும் வேலை,டென்ஷன், பரப்பரப்பு என அலைந்துக்கொண்டே இருந்தால்,அந்த அலுப்பும் சலிப்புமே நம் இயல்பிலும் பிரதிபலிக்கும். ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று.அந்த இயல்பை மீட்டெடுப்பது அத்தனை சிரமம் அல்ல. சற்றே மெனக்கெட்டால் சாத்தியமே!

உணவு ,தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம்..இந்த நான்கையும் திறம்பட நிர்வகிப்பதுதான் “லைஃப்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்” என்கிற வாழ்க்கைமுறை திட்டமிடல். தினமும் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் இதை முறையாகச் செய்தாலே ஆரோக்கியம் மிளிரும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் உழைப்பு என்பது பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கி,எல்லாமே ஒரு “டச்”சில் வந்து நிற்கின்றன. ஆனால் மனித உடலோ இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உழைத்து உழைத்து உழைப்புக்குப் பழக்கப்பட்டிருக்கிறது.உழைத்துக்கொண்டே இருந்தால், அதன் இயங்குதன்மை சீரான ஒழுங்குடன் இருக்கிறது. அதுவே உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால், அதில் சிக்கல் உண்டாகிறது. கொழுப்பு, தசை, எலும்பு எல்லாமே சேர்ந்ததுதான் மனித உடல்.வெளியேற்றுவதற்கான வேலையே கொடுக்காத போது உடம்பில் கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. இயக்கமே இல்லாமல் தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வெயிலில் கூட செல்லாமல் ஏசியிலும், அலுவலகத்தின் உள்ளேயும் அமர்ந்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இளம் பருவத்தில் ஆரோக்கியமான ஓர் இளைஞனுக்கு, உடலில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு, அது 25-30 சதவிகிதமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஆண் உடலில் 40 சதவிகிதம் கொழுப்பும், பெண் உடலில் 50 சதவிகிதம் கொழுப்பும் இருக்கிறது. மனித உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியம்தான். ஆனாலும், அதன் பணி மிகவும் வரம்புக்கு உட்பட்டது. அது,குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். உடலின் வைட்டமின்களை பாதுகாக்கும்.முக்கியமாக உடம்பில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருந்தால், அது வேறு உறுப்புகளை பாதிக்காதவாறு, கொழுப்பு தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். ஆக, உடம்பில் ஏராளமான கொழுப்பு இருந்தால், அது அந்தளவுக்கு நச்சுப்பொருட்களை உடலுக்குள் அடைத்து வைத்திருக்கிறது எனப் பொருள்.

நவீன நகர வாழ்வில் மண், நீர், காற்று..என சுற்றுப்புறம் முழுவதையும் நச்சாக்கி வைத்திருக்கிறோம். பாக்கெட் உணவுகள், வினோத சுவையூட்டிகள், பிராய்லர் சிக்கன்,அழகுச் சாதன பொருட்கள்..என உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வேதிப் பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். இவைதான் நச்சாக மாறி, உடலின் கொழுப்புடன் சேர்ந்துக் கொள்கின்றன. பிறகு அவை ஒவ்வொரு நோயாக உருவாக்கி நம் வாழ்க்கையை நரகம் ஆக்குக்கின்றன. பதற வேண்டாம்..! வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் சிலவற்றை செய்வதன் மூலம் இந்த சூழலை எளிதாக கடந்து வர முடியும்!





தூக்கத்தில் தொடங்குவோம்


பகலில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது இரவில் நம் தூக்கம் எப்படி இருந்தது என்பதை பொறுத்துதான் அமையும். போலவே, தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வும் பகலில் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நிம்மதியான தூக்கம் மூளையை மிரட்டி ஓய்வெடுக்க சொல்லும். இதனால் மன அழுத்தம் தீரும். தூங்கும் நேரம், தூங்கும் முறைகள் ஆகியவை தூக்கத்தை அதிகம் பாதிக்கும். ஒவ்வொருவருக்கும், அவர் உடல் மற்றும் செய்யும் வேலையின் தன்மை பொறுத்து தேவையான தூங்கும் நேரம் மாறுபடும்.எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை நீங்கள்தான் அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும். உங்கள் தூக்கத்தை செறிவூட்டி, பகல் நேரத்தில் நிம்மதியாக இருக்க வழிவகுக்க சில டிப்ஸ் இதோ:


முறையான தூங்கும் நேரம்:

எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படை. அது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, உடலுக்கு பல வகையில் நல்லது. வார இறுதிகளில் இதை பின்பற்றுவது கடினம் என்பவர்கள் அதற்கேற்றது போல நேரத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.. இரவில் ஏதேனும் வேலை வந்து தூங்குவதற்கு தாமதமானால் பகலில் தூங்கி அதை சமன் செய்யலாம்.எழுந்திருக்கும் நேரத்தை மாற்றாமலிருக்கவும், அதே சமயம் போதுமான நேரம் தூங்கவும் இது உதவும். ஆனால் மற்ற நாட்களிலும் பகலில் தூங்குவது, இரவு தூக்கத்தை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது. சில சமயம் இரவு உணவுக்கு பின் உடனே தூக்கம் வரலாம். அப்போது எதாவது உடற்பயிற்சிகள் செய்து, நண்பர்களுக்கு ஃபோன் செய்து, தூக்கத்தை விரட்டவும். சீக்கிரம் தூங்கிவிட்டால் நள்ளிரவில் முழிப்பு வந்து மொத்த சிஸ்டமும் குலைந்து போகும்.






மெலட்டனின் ஹார்மோன்:

இயற்கை ஒளியால் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் நம் தூக்கத்தை முடிவு செய்கிறது. சூரியனை பார்க்காமல் அலுவலகத்திலே வேலை செய்பவர்களுக்கு பகலிலே தூக்கம் அதிகமாக வரக்காரணம் மெலட்டனின் தான்.. போலவே, இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டர் என தேவைக்கு அதிகமான வெளிச்சத்தால் தூக்கம் போவதற்கும் இந்த ஹார்மோனே காரணம். வேலை இடத்தில் வெளிச்சம் அதிகம் வருமாறு அமைப்பது, வேலை இடைவெளியில் சூரிய ஒளியில் நடப்பது போன்றவை பகலில் நம்மை உற்சாகமாக வைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பது தூக்கத்தை கெடுக்கும். ஐபேட், கிண்டில் போன்ற கருவிகளை இரவில் தவிர்க்கலாம். அறையில் இருக்கும் விளக்குகள் பிரகாசமான ஒளியமைப்பு கொண்டதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியில் இருந்து விழும் நிழல்கள் தெரியாதவண்ணம் திரைச்சீலைகள் அமைத்துக்கொள்ளுங்கள். இரவு தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல எழுந்தாலும் உடனே விளக்குகளை போடாமல் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மீண்டும் விரைவில் உறங்க செல்வதற்கு இது உதவும்.


படுக்கையறை:

படுக்கயறையை அழகாக டெகரெட் செய்வதை விட தூங்குவதற்கு ஏற்ற இடமாக வைத்து கொள்வதுதான் முக்கியம்., அண்டை வீட்டில் இருந்து வரும் சத்தம் போன்ற இரவு நேர சத்தங்கள் அறைக்குள் கேட்காத வண்ணம் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள். மெல்லிய ஒலியில் இசை ஒலிப்பது இந்த சத்தங்களில் இருந்து நம்மை காப்பாற்றும். அதிக சத்தமெனில் இயர் ப்ளக் பயன்படுத்துங்கள். ஒலியை போலவே அறையின் வெப்பநிலையும் மிக முக்கியமானது. அடிக்கடி ஏசியை அணைத்து பின் மீண்டும் போடுவது என்றில்லாமல் சீரான வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மெத்தை மற்றும் தலையணை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்யவே கூடாது. உங்களுக்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள். ஏதேனும் பிரச்சினை எனில் மாற்றுவதற்கு தயங்காதீர்கள். பெரும்பாலானவர்களின் நிம்மதியற்ற தூக்கத்திற்கு இவைதான் காரணமென மருத்துவர்கள் சொல்கிறார்கள். படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். அங்கேயே அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள். மெத்தைக்கு வந்த உடனே தூங்க வேண்டும் என உடல் தானாக தயாராகி விடும்.





இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இன்னும் சில காரணிகளும் நம் தூக்கத்தை மேம்படுத்த உதவும். அளவான இரவு உணவு, காஃபியை தவிர்ப்பது, புகையை தவிர்ப்பது.. இவையெல்லாம் நம் தூக்கத்தை நேரிடையாக பாதிக்கும் விஷயங்கள்.இரவில் அதிக திரவ உணவு எடுத்துக்கொள்வதும் தூக்கத்தை நள்ளிரவில் பாதிக்கும்.தூக்கம் வரவில்லையெனில் மூச்சை நன்றாக இழுத்து பின் விடவும். இது நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக உதவும்.

நல்லா தூங்குங்க பாஸ்.

குறைவாக தூங்குவதால் ஏற்படும் ஆபத்து!



இன்றைய சூழலில் வேலைப்பளு காரணமாக பலரும் போதிய நேரம் தூங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஒரு நாளைக்குத் தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ளாதபோது உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரில்லாமல் உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், நமக்கு அறியாமலேயே நிறைய உணவு உட்கொள்வோம். பசியைத் தூண்டும், உணவை ஜீரணிக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது. அதேபோல அதிக நேரம் தூங்குவதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே, அதிக நேர தூக்கத்தையும் தவிர்ப்பது நல்லது.

அதிகாலை விழித்தெழுதல் நல்லனவெல்லாம் தரும்... துயிலெழ உதவும் 10 வழிகள்!



'அதிகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்' என்பது வழக்குமொழி. `சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழித்தெழுவதுதான் ஒருவனை ஆரோக்கியமாகவும், திறமையானவனாகவும், புத்திகூர்மையுள்ளவனாகவும் வைத்திருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க அறிஞர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அதாவது, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் குறிக்கோளை எளிதாக அடைய முடியும் என்பதே உண்மை. வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் இந்த வழக்கத்தைக்கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.





ஆனால், இன்றைய தலைமுறையிலோ, பலரும் நடு இரவுக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள்; காலையில் தாமதமாகத்தான் எழுகிறார்கள். இதனால் பல உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அவசர அவசரமாகக் கிளம்பவேண்டியிருப்பதால், காலை உணவைத் தவிர்ப்பது தொடங்கி, கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்கு ஆளாவது வரை பல விபரீதங்கள்!

அதிகாலையில் எழுகிறவர்களோ பொறுமையாக, அவசரம் இல்லாமல் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லலாம். அவர்களுக்குக் கூடுதல் நேரம் இருப்பதால், பதற்றம் இல்லாமல் பணியைத் தொடங்கலாம். அதோடு அலுவல நெருக்கடி, மனச்சோர்வு, உடல் உபாதைகள், மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும் முடியும். ஆனாலும், பலராலும் விடியற்காலையில் எழுந்திருப்பது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. அதற்கு உதவும் 10 வழிகள் இங்கே...

மதியத்தில் நீண்ட வாக்கிங்!

மதிய உணவு இடைவேளையில் ஒரு நீண்ட வாக்கிங் சென்று வரலாம். நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடப்பது நல்லது. இந்தப் பழக்கம், இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு உதவும்.



மாலைப்பொழுதில் எக்சர்சைஸ்!

`காலை நேரத்தைவிட மாலை நேரங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சிக்கு இரவில் தூக்கம் வரவழைக்கும் சக்தி அதிகம்’ என்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள். எனவே, மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்!

இரவு நேரத்தில், தொலைக்காட்சித் திரையில் இருந்து வெளிப்படும் ஊதா நிற கதிர்கள், உடலில் `மெலட்டனின்’ ( Melatonin) என்ற தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன் சுரப்பைப் பாதிக்கும். எனவே, இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைத் தவிர்க்கவும்.



மணம் வீசும் விளக்கு உதவும்!

இரவில் தூங்கச் செல்லும்போது, அறையில் இரவு விளக்காக நறுமணம் வீசும் எண்ணெய் விளக்குகளை (Aroma Lamps) ஏற்றிவைக்கலாம். இவற்றிலிருந்து வெளிப்படும் வாசம், மனதை ரிலாக்ஸாக்கி, அழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்; உடற்சோர்வை நீங்கவும் உதவும்.

இரவு உணவைக் குறைக்கவும்!

இரவில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு அல்லது குறைந்த அளவான உணவைச் சாப்பிடலாம். இதனால், அதிகாலையிலேயே பசியுணர்வு ஏற்பட்டுவிடும். அது, நம்மை எழுப்பிவிட்டுவிடும்.



தூக்கத்தை வரவேற்கவும்!

தூக்கம் வரும் உணர்வு ஏற்பட்டால் மட்டும் உறங்கச் செல்வது என்பதை வழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இது படுக்கையில் படுத்தும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதையும், தூங்குவதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கும்.

அறைக்குள் வரட்டும் ஆகாசக் காற்று!

இரவில் தூங்கும் அறையின் ஜன்னல்களை முடிந்தவரை திறந்து வைத்துத் தூங்குவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உறக்கத்தின்போது அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுவோம். அது மூடிய அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்தால், மூச்சுவிட சிரமம் ஏற்படும். அதன் காரணமாகவும், தூக்கம் கலையலாம். இடையூறு இல்லாத தூக்கம்தான் 
காலையில் சீக்கிரத்தில் எழுந்திரிக்க நமக்கு உதவும்.

தட்டியெழுப்ப ரசனைக்குரிய பாடல்!

`அலாரம்வெச்சாலும் என்னால எந்திரிக்க முடியலை’ என்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், அலார சத்தத்தை எழுப்பும் கடிகாரத்தையோ, செல்போனையோ உறங்கும் இடத்துக்கு அருகில் வைக்கக் கூடாது. சற்று தொலைவில், கேட்கும் தூரத்தில் வைக்க வேண்டும். அதாவது, அறைக்கு வெளிப்புறத்தில் அல்லது பக்கத்து அறையில் வைத்துவிடலாம். இதனால் ஒலி எழும்போது அதை ஆஃப் செய்வதற்காக எழுந்து செல்வோம்; தூக்கம் கலைந்து சுறுசுறுப்பு ஏற்படும். அலாரத்துக்காக வைக்கும் பாடல் நமக்கு பிடித்தமான பாடலாக இருப்பது நல்லது. அந்தப் பாடல் சத்தம் தொலைவில் இருந்தாலும், நம் மூளையை எளிதில் தூண்டி உறக்கத்தைப் போக்கிவிடும்.

சூரிய ஒளி உசுப்பிவிடும்!

மொட்டைமாடியில் தூங்குவது அல்லது படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நல்லது. சூரிய ஒளியே நம்மை உசுப்பி எழுப்பிவிடும்; புத்துணர்வுடன் எழுந்துகொள்ள உதவும்.



குறிக்கோள் முக்கியம்!

பொதுவாக எந்த நிர்பந்தமும், பெரிய அளவிலான தீர்மானமும் இல்லாதவர்கள் அதிகாலையில் எழுந்துகொள்வதில்லை. எனவே, திடமான குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம், `காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தையாவது உறுதியாக எடுத்துக்கொண்டால், மூளையே அலாரம் அடித்து நம்மை எழுப்பிவிட்டுவிடும். உண்மையில், மூளையைவிடச் சிறந்த அலாரம் ஏதுமில்லை!

வேப்பிலை முதல் வெங்காயம் வரை... பொடுகுத் தொல்லையைப் போக்கும் 10 இயற்கை வழிகள்!



சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு! குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்!


பொடுகு ஏன் ஏற்படுகிறது?

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.

`பொடுகுப் பிரச்னையைப் போக்கலாம்’ என வெளியாகும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏராளம். அவற்றை நம்பி, கண்ட கண்ட ஷாம்பூகளை, அதிகப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால், `இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை’ என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அப்படி பொடுகை விரட்ட உதவும் 10 வழிகள் இங்கே....



தேங்காய் எண்ணெய்-எலுமிச்சைச் சாறு மசாஜ்!

எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தயிர் தேய்த்துக் குளியல்!

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.



பேக்கிங் சோடா பேக்!

ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசவும். பேக்கிங் சோடா பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டு விடும்... கவனம்!

கூந்தல் ஊட்டத்துக்கு டீ ட்ரீ எண்ணெய் (Tea Tree Oil)

தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவது, தேயிலை மர எண்ணெய். இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.



ஆப்பிள் சிடர் வினிகர்... பொடுகு மருந்து!

ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து ஊறவைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட வேண்டும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

வெந்தயம்... வீரியம்!

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெங்காயம் காக்கும்!

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை கசப்பு... பாக்டீரியாவுக்கு எதிரி!

கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.



ஆரஞ்சு தோல்... அட்டகாசம்!

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

மருதாணி இலை மகிமை!

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த முறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி பொடுகுப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அதேநேரத்தில் மனஅழுத்தம் போன்ற பொடுகு உருவாவதற்கான காரணங்களைக் களையாவிட்டால், இதனால் முழுமையான பலன் கிடைக்காது.

Thursday, April 6, 2017

பூமியிலிருந்து நிலாவுக்கு லிஃப்ட்... சென்னை மாணவனின் ஐடியாவைப் பாராட்டிய நாசா!



ஷாப்பிங் மால்களிலும், பெரிய அடுக்குமாடி கட்டடங்களிலும் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குச் செல்ல லிஃப்ட் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இந்த மாணவன் கொஞ்சம் வித்தியாசமாக பூமியில் இருந்து நிலவுக்கு லிஃப்ட் வைக்க ஐடியா கொடுத்துள்ளார். "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு பாஸ்" என நீங்கள் கேட்கலாம். ஆனா இது ஒரு நல்ல ஐடியான்னு நாசா பாராட்டி இரண்டாம் பரிசு கொடுத்திருக்கு,

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையம், சான் ஜோன்ஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியோடு இணைந்து 12-ம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியை நடத்தியது. இதன் தலைப்பாக மனிதர்கள் நிலாவில் வாழத்தகுதியான சாத்தியக்கூறுகளை அமைப்பது என அறிவித்திருந்தது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மாணவர்கள் தங்களது ஐடியாக்களை அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிங்கப்பூரில் வாழும் சென்னையை பூர்வீகமாக கொண்ட சாய் கிரண் என்ற மாணவன் கொடுத்த ஐடியாவைக் கண்டு வியந்துள்ளது நாசா.

    

சாய் கிரண் 2013-ம் ஆண்டில் இருந்து தனது ஐடியாவைக் கூறி வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு ‘Connecting Moon, Earth and Space’ and ‘HUMEIU Space Habitats’ என்று பெயரிட்டுள்ளார். இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிஃப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான். இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்குப் பாதை அமைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு மனிதர்கள் வாழத் தேவையான விஷயங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் ஈர்ப்பு விசை, இது இல்லாமல் மனிதர்கள் அங்கு இருப்பது சாத்தியமற்றது. அதற்கான விஷயங்களோடு இந்த எலிவேட்டரை தயாரிக்க வேண்டும். வெறும் நிலவுக்குச் செல்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கமல்ல, அங்கு மறு உருவாக்கம், பொழுதுபோக்கு, ஆட்சியமைப்பு, விவசாயம் ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும். ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அணுப்புவது அதிக செலவு எடுக்கும் விஷயம். இன்னமும் இந்த லிஃப்ட் போன்ற அமைப்பு பொருளாதார ரீதியாக தற்போதைக்கு சாத்தியமற்றது என்றாலும், பிற்காலத்தில் இது சாத்தியமாகலாம். மொத்தமாக 3.8 லட்சம் கிலோ மிட்டர் தொலைவு கொண்ட இந்த திட்டத்தை பூமியிலிருந்து நிலவுக்கு அல்லது நிலவிலிருந்து பூமிக்கு என்ற அடிப்படையில் செய்யலாம் என்ற திட்ட வடிவத்தை சமர்பித்தார் சாய் கிரண்.

மேலும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் வந்த திட்டங்களில் சாய் கிரண் சமர்பித்த திட்டத்தில் மனித வாழ்வாதாரங்கள், தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் மட்டுமின்றி மனித வாழ்வியல் சார்ந்த விஷயங்களுக்கும் இடம் அளித்திருந்தார். இதுதான் மற்ற திட்டங்களில் இருந்து அவரது திட்டத்தை தனித்துக் காட்டியுள்ளது. சென்ற மார்ச் மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியைத் தொடர்கிறார் சாய் கிரண். ஏற்கெனவே இந்திய விண்வெளித்துறையை கண்டு வியக்கும் நாசா. தற்போது தமிழனின் திட்டத்தைக் கண்டு வியந்துள்ளது.

இந்த திட்டத்தைக் கண்டு வியந்த நாசா இவருக்கு இரண்டாவது பரிசளித்து கெளரவித்துள்ளது. ஒருவேளை இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் உண்மையாலுமே ஹனிமூனுக்கு மூனுக்கே செல்லலாம். நிலவிலிருந்து விளைவிக்கப்பட்ட பழங்கள் என்று கூட விற்பனை செய்யப்படலாம்... இவையெல்லாம் நடக்கும்போது இதற்கு அடித்தளமிட்டது ஒரு தமிழன் என்று உலகம் வியந்து பேசும்...

வாழ்த்துகள் தமிழா...

சூரிய பகவானை சமாளிப்பது எப்படி? - அதிரிபுதிரி டிப்ஸ்




வெயில் வாட்டி எடுக்க ஆரம்பிடுச்சுடுச்சு. கொளுத்துற சூரிய பகவான் பார்வையில இருந்து தப்பிக்க சில அதிரிபுதிரி ஐடியாஸ் இதோ!

      

இத்தனை நாள் நாம் பள்ளத்தாக்கிலே சரிந்தும், ஸ்பீட் பிரேக்கரில் ப்ரேக் அடிக்காமல் போனதற்கும், இன்ஜினுக்கு ஆயில் ஊற்றாமல் கதறவிட்டதற்கும் சேர்த்து, நமக்குப் பாடம் புகட்ட கடவுள் பைக்குகளுக்கு ஒரு 'டைம்' ஒதுக்குவார். அதுதான் வெயில் காலம். வண்டியை வெயிலில் நிறுத்தினால் அது நம்மை 'பின்னால்' சுட்டு பழி தீர்த்துக்கொள்ளும். ஹாஹா, நாம யாரு? 'ஐ யம் நாட் பேட், ஐ யம் ஜஸ்ட் ஈவில்' னு சித்தார்த் அபிமன்யு மாதிரி பேசி நிழலில் சாய்ச்சுவிட்டா? 'அடிக்கிற வெயில் கூரையைப் பிச்சிக்கிட்டு அடிக்குமாம்'கிற புதுமொழி கணக்கா சீட்டு கொதிக்குது!

வீட்ல ஃபேன் ஸ்பீடு குறைஞ்ச மாதிரி தெரிஞ்சா, வெயில் பீக்ல இருக்குன்னு அர்த்தம். ஃபேன் எப்பவும் போல அதே ஸ்பீடுலதான் சுத்துது. நமக்குதான் ஓவரா கொட்டுது. #'ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ'

ஃபேஸ்புக்கில் 'எவ்வளவு வெயில் அடித்தாலும் எங்க சென்னைடாவ்வ்வ்வ்'னு பெருமை பீத்தக்கலை ஸ்டேட்டஸ் போட்டுட்டு ரகுவரன் மாதிரி கழுத்துகிட்ட இருக்கிற வேர்வையைத் துடைச்சு தெறிக்கவிடலாம். #வெயிலில் கர்ச்சீப் இல்லாதவனை சீப்பாக பார்க்கும் சமுதாயம்.

மழைக் காலத்துல திடீர்னு முளைச்சா அது காளான். வெயில் காலத்துல திடீர்னு முளைச்சா அது நுங்கு, இளநீர், தர்பூசணிக் கடை. யோசனையே வேண்டாம். வண்டியை நிறுத்திட்டுப் போய் ஒரு சிப் அடிச்சு, ரெண்டு துண்டு சாப்பிட்டுட்டு வந்து, சீட்ல துண்டைப் போட்டு உட்கார்ந்து, திரும்பி நம்ம பயணத்தைத் தொடரலாம். #ஏனோ வானிலை மாறுதே.

டி.வி-யில் 'இது மாம்பழ சீசன்'னு ஒரு பொண்ணு மஞ்ச சேலை (இல்ல, சேலை மாதிரி ஏதோ ஒண்ணு) கட்டிக்கிட்டு கைல மாங்கோ ஜூஸ் பாட்டிலோட வரும். 'நீ அப்படியே நில்லும்மா'னு சொல்லிட்டு, வெளியே போய் ஒரு கிலோ பங்கனபல்லியோ, அல்போன்ஸோ வாங்கிட்டு வந்து, வெறுப்பேத்திக்கிடே சாப்பிடலாம். #ஒரிஜினல் இருக்கும்போது டூப்ளிகேட் எதுக்கும்மா?

காலையிலே துணிக் காயப்போட்ட அம்மா, மதியானமே மாடிக்குப் போய் எடுத்துட்டு வாடா'னு சொல்றாங்களா? அப்புடின்னா, துணி எரிஞ்சுப் போயிடுமோங்கிற பயம் அவங்களுக்கு. #என்னா வெயிலு, துணிக்கே பெயிலு.

வெயில் காலத்துல குளிக்கிறது ரொம்ப அவசியம். ஏன்னா, நாம் கேட்காமலே அந்தச் சூரியன் நம்மை உப்புத் தண்ணியில குளிப்பாட்டுறதால நீ யாரு என்னைக் குளிப்பாட்ட?னு வைராக்கியதோட நாமே குளிச்சிட்டா, நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு அது நல்லது. # நெருங்கி வருவாய், நெருங்கி வருவாய் மொமென்ட்தான்.

Wednesday, April 5, 2017

இதய நோய் கவனம்! அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்!



‘உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில்தான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) சமீபத்திய அறிக்கை ஒன்று. 2016-ம் ஆண்டு வெளியான ஒரு புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 33 விநாடிகளுக்கும் இந்தியாவில் ஒருவர் மாரடைப்புக்கு ஆளாகி இறந்து போகிறார். உண்மையில், மாரடைப்பு தவிர்க்கக்கூடியதே! 
 
இதய நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை. ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததாலும் அல்லது அலட்சியப் படுத்துவதாலும்தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் தப்பித்துவிடலாம். 
 
 
என்னென்ன அறிகுறிகள் அவை? பார்ப்போம்...

                                 

உறங்குவதில் சிரமம்!

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்குக் கடினமாக உணர்வார்கள். நுரையீரலில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்படும். பிறகு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இதனால் தூங்குவது கடினமாக இருக்கும். இதற்காக தூக்க மாத்திரைகள் உட்கொள்ள ஆரம்பித்தால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

வேகமாக எடை அதிகரித்தல்!

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு நிகழாத அளவுக்கு மிக வேகமாக எடை கூடும். இதயத்தில் நீர் கோத்தல் அல்லது இதய அடைப்பு போன்றவற்றால் இப்படி எடை அதிகரிக்கும். ரத்தக்குழாய்களில் கோத்துள்ள நீர், சுற்றியுள்ள திசுக்களிலும் சேர்ந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பைக் கூட்டும்.

கால் வீக்கம்

கால், பாதம் போன்ற இடங்களில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்கள் வீக்கமடையும். இதன் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது.

அடிவயிறு வீக்கம்

அடிவயிற்றில் நீர் கோத்துக்கொள்ளும். கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.

இருமல்

நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இருமல் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி கேட்கும்.

                         

சளி

நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும். இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும்.

சோர்வு

இதயச் செயலிழப்பு அல்லது இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளவர்கள் அதிகக் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது.

குமட்டல் மற்றும் பசியின்மை

கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளைச் சுற்றிக் கோத்திருக்கும் நீர், செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தலைச்சுற்றல்

இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வியர்த்தல்

எந்தவொரு காரணமும் இல்லாமல் கடுமையாக வியர்த்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை இது, மாரடைப்பபுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

            



இதய வலி

இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும்.

சீரற்ற இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு சீரில்லாமல் இருப்பது இதயநோய்க்கான அறிகுறி. வழக்கத்துக்கு மாறாக, மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும்.

தோல் நிற மாற்றம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் தோல் நீல நிறமாக மாறும். இதற்கு ‘சயனோஸிஸ்’ (Cyanosis) என்று பெயர். இது, அரிதாகச் சிலருக்கு ஏற்படலாம். வருமுன் காப்பதே எப்போதும் சிறந்தது. இதய நோய்கள் தாக்குவதற்கு முன்னரே சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்ட நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழலாம். ஆனால், அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பாதிப்புகள் முற்றிவிடும். ‘இதயநோய்’ என்ற பிரமாண்டமான யானை வருவதற்கு முன்னதாகவே மணியோசையாக வரும் இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். உரிய சிசிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது இதயத்தை இதமாக வைத்திருக்கும்; வலுவாக்கும்!

கோடை விடுமுறை குழந்தைகளுக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்தான் பெண்களே..!



பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், 'அப்பாடா' என ரிலாக்ஸ் ஆவது குழந்தைகளை விட அவர்களின் அம்மாவும்தான். ஏனெனில், பள்ளி நாட்களில் காலையில் குழந்தையை எழுப்பி, ஹோம் வொர்க் செய்யவைத்து, டிபன் செய்து, பள்ளிக்கு அனுப்பி, மாலையில் அவர்களை அழைத்து வந்து, ஸ்கூல் டைரியில் ஆசிரியர் எழுதி தந்தவற்றைப் படிக்க வைத்து, சீருடைகளைச் சலவைச் செய்து, சீக்கிரமே தூங்க வைப்பதற்குள்... ஒருநாளை கடப்பது பெண்களுக்கு எளிதல்லவே... அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் இரட்டைச் சுமைதான்.

குழந்தைகள் தங்களுக்கு விடப்படும் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம் என்பதற்கு பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள். அவர்களைப் போலவே பெண்களும் கோடை விடுமுறையை செலவழிக்க திட்டம் தீட்டிக்கொள்ளலாமே... 'குழந்தைகள் படிக்கிறார்கள் அவர்களுக்கு விடுமுறை என்பது சரி. நாங்கள் என்ன படிக்கிறோமா?' என்ற கேள்வி சில பெண்களுக்கு எழலாம். சில விஷயங்களை யோசித்துப் பாருங்கள்.

நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்தன்று உங்கள் மகனுக்கு செய்முறை தேர்வு. அதனால், திருமணத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். கிராமத்தில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோதுகூட பணம் அனுப்ப முடிந்ததே தவிர, அருகில் இருந்து ஒருவாரம் கவனித்துக்கொள்ள முடியவில்லை என்று கவலையும் இருக்கும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அவற்றையெல்லாம் சரி செய்யும் விதத்தில் திட்டமிடுங்கள்.

தங்கள் திருமணத்திற்கு வர வில்லையே என உங்கள் மீது வருத்தமாக இருக்கும் உறவினர் வீட்டுக்கு திடீர் விசிட் அடியுங்கள். எதிர்பாராத பரிசு பொருளை அளியுங்கள்.

கிராமத்தில் இருக்கும் வயதான பாட்டி, தாத்தாக்களுடன் நிதானமாக சில நாட்களைச் செலவழியுங்கள். அவர்களுக்கு மருத்துவத்தை விடவும் அன்பான உறவுகள் அருகில் இருப்பதே மகிழ்ச்சியைத் தரும்.

   

இவை போன்ற சூழல் சிலருக்கு நேராமல் இருந்திருக்கலாம். மேலும், உறவுகளை தகவமைப்பு மட்டுமேதான் பெண்கள் வேலை என்று ஒதுக்கி விட முடியாதுதானே. பெண்களுக்கு என்றும் சில விருப்பங்கள் இருக்கும். அவற்றை இந்த விடுமுறைக் காலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும்போது ஆங்கிலம் பேசத் திணறியப் பழக்கம் இப்போது வரை சில பெண்களுக்கு இருக்கக்கூடும். அதனால், பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் பேரன்டிங் மீட்டிங்கில் பேசுவதற்கு தயக்கம் காட்டுவர். இந்த இரண்டு மாதங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புக்குச் செல்லலாம். தன் தயக்கத்தை உடைத்து வெளியே வரலாம்.

ஆங்கிலம் அல்லாது வேறு மொழி கற்றுக்கொள்ளும் ஆர்வம் சிலருக்கு இருக்கலாம். அதற்கான பயிற்சி நேரம் காலை, மாலை என பிள்ளைகளின் பள்ளி நேரத்தை ஒட்டியே இருப்பதால் தங்கள் ஆர்வத்திற்கு அணை போட்டிருப்பர். இந்த விடுமுறை நாட்களை புதிய மொழியைக் கற்றுக்கொள்ள பயன்படுத்தலாம்.

ஏதேனும் இசைக் கருவி இசைக்கப் பழக, ஓவியம் வரைய உள்ளிட்ட தனித்திறன் பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள பெண்கள் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்களைப் போல பெண்கள் தங்கள் நட்பைத் தொடர முடிவதில்லை. முகநூல், வாட்ஸ் அப் என தொடர்பில் இருந்தாலும் முகம் பார்த்து பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஏதேனும் ஓர் இடத்தில் பழைய கதைகளைப் பேசுவதுபோல ஆகாது. அந்த ஆசைகளை நிறைவேற்றும் மாதங்களாக ஏப்ரல், மே அமையட்டும்.

பெண்களில் பலருக்கும் சுய தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வேலைக்குச் செல்லும் இடங்களில் ஏதேனும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகம் இருக்கும். லாபம் தரும் சுய தொழில் செய்ய தெரிந்தும், அதற்கான ஆயத்தப் பயிற்சிகளுக்கு நேரம் கிடைக்காமல் இருப்பர். அவர்கள் இந்தக் கோடை விடுமுறை காலத்தை முறையாக பயன்படுத்தி, சுய தொழிலில் இறங்க முதல் அடியை எடுத்து வைக்கலாம்.

பல ஆண்டுகளாக செல்ல நினைத்த சுற்றுலா தளங்களுக்குச் செல்லுங்கள். தங்களுக்கான வலிமையை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திகொள்ளுங்கள் பெண்களே.