Thursday, March 23, 2017

முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி... கைகொடுக்கும் வீட்டு வைத்தியம்!



நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அந்த வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்...


ஐஸ் ஒத்தடம்

நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 - 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இருபது நிமிடங்களுக்கு மேல் இதை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை வலியும் வீக்கமும் குறையும் வரை இந்த ஒத்தடத்தைக் கொடுக்கலாம். சூடான நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுப்பதும் பயன் தரும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்

மூன்று அல்லது நான்கு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வலியுள்ள இடத்தில் தடவி, 10 -15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்துவந்தால், முழங்கால் வலி குறையும்.

காலை உயர்த்தி வைத்தல் 
 
வலியுள்ள காலை சோஃபா அல்லது தலையணை மீது முடிந்த வரை உயர்த்தி வைத்திருக்கலாம். இது வீக்கம், வலியைக் குறைக்கும்.

இஞ்சி

தினமும் இஞ்சி டீ குடிப்பது முழங்காலுக்கு நல்லது. வீக்கம் மற்றும் மூட்டு வாதத்துக்கும் இது மருந்தாக அமையும்.

மஞ்சள் பால்

இரண்டு கப் பாலில் ஒரு டீஸ்பூன் நொறுக்கிய பாதாம், வால்நட் பவுடர், சிறிது மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இது அளவில் பாதியாகும் வரை காய்ச்சவும். இதை தினமும் குடித்துவர, கால் மூட்டுகள் உறுதியாகும்; முழங்கால் வலி குறையும்.

பப்பாளி விதை டீ

சிறிது பப்பாளி விதைகளைப் போதுமான அளவு நீரில் போட்டு, எட்டு முதல் பத்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். பின்னர், இதில் சிறிது டீத்தூளைக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்கவைக்கவும். இதை வடிகட்டி, இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது கருமிளகுப் பொடி சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர, முழங்கால் வலி குறையும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தை ஜூஸ் ஆக்காமல் அப்படியே சாப்பிட்டுவந்தால், முழங்கால் வலி குறையும்.

கேரட்

கேரட், முழங்கால் மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து. இது சீன மருத்துவ முறைகளில் காலங்காலமாக பயன்படுத்தப்படுவது. இரண்டு கேரட்களை சிறு துண்டுகளாக அரிந்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து குடிக்கலாம்.

வெந்தயம்

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவிலேயே நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்த நீரைச் சாப்பிட்டுவர, முழங்கால் மூட்டுப் பிரச்னைகள் குணமாகும். வெந்தயத்தைத் தண்ணீரில் கலந்து பேஸ்ட்போலச் செய்து அதை வலியுள்ள இடத்தில் பூசலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. இது வலியைக் குறைக்க உதவும். வீக்கம், கட்டிகளுக்கு எதிராகச் செயல்படும். வெங்காயம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

பருப்புக்கீரை

பருப்புக்கீரையை வேகவைத்து, அரைத்து சாறாக்கிக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முழங்கால் வலி குறைய இது உதவும்.

தண்ணீர்

தண்ணீர் நமது உடலுக்கு அத்தியாவசியத் தேவை. இது முழங்கால் வலியைக் குறைக்க உதவும். நமது மூட்டுப் பகுதியில் வழுவழுப்பான உள் உறைப் பகுதி (Lining) இருக்கும். இதை கார்டிலேஜ் (Cartilage) என்கிறோம். தண்ணீர் கார்டிலேஜை மென்மையாக்கும். மூட்டுப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி , தேவையான சத்துகளை மூட்டுப் பகுதிகளுக்குக் கடத்தும். முழங்கால் மூட்டிலுள்ள நச்சுப்பொருட்களையும் தண்ணீர் வெளியேற்றும்.

மக்னீசியம்

மக்னீசியம், நமது தசை மற்றும் நரம்பை ஓய்வாக உணரச் செய்யும். வலியைக் குறைக்கும். கீரை வகைகள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளது. இது முழங்கால் வலியை முழுமையாகக் குறைக்கும்.

எடை

உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும். சரியான சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் எடை கட்டுக்குள் இருக்கும். கால் வலியும் குறையும்.

பொருத்தமான ஷூ

சரியான அளவில், பொருத்தமான ஷூ, செருப்பு போன்றவற்றை அணிவது கால் வலியிலிருந்து பாதுகாப்பு தரும். ஷூ வாங்கும்போது உள்ளே இருக்கும் பஞ்சு போன்ற பொருள் வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் ஒரு இன்ச்சைவிடப் பெரிய ஹீல் வைத்த ஷூ, செருப்பு வாங்கக் கூடாது.

நாம் உட்காரும் முறைகூட கால்வலிக்குக் காரணமாக இருக்கலாம். திடீரென ஒரு நாள் நம்மை அறியாமல் உட்காரும் முறையை மாற்றினால், கால்வலி குணமாகும் ஆச்சர்யம் நிகழலாம். வீக்கம், வலி போன்றவற்றுக்கான காரணங்கள் தெரிந்தால், இந்த வீட்டு வைத்திய வழிமுறைகள் நிச்சயம் பலன் கொடுக்கும். மற்றபடி, நீண்ட நாட்களாகத் தொடரும் வலி, கடுமையான வலிகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

நவகிரகங்களை வழிபடும் முறையும்... அதன் பலன்களும்



கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். 
 
மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா... நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்... அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நவகிரக ரத்னஜோதி சந்திரசேகர பாரதி.

                           



ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

எனவே, இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.

                           


கிரக வழிபாடும் பலன்களும்...

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

பலன் தரும் பாடல்

திருஞானசம்பந்தரின் 'கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

Wednesday, March 22, 2017

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?



பெற்றோர்கள், தங்களுடைய மகள் அல்லது மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணும்போது அவர்களின் மனதில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதாவது, எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த எந்த நட்சத்திரம் திருமணத்துக்கு உகந்தது அல்ல,எந்த நட்சத்திரம் தம் பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கை.அந்த வரிசையில், அனைவருக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஏக நட்சத்திரம் மற்றும் ஏக ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். 

           

ஏக நட்சத்திரம் என்றால் என்ன? அல்லது ஏக ராசி என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம், ஏகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் 'ஒன்று' எனப் பொருள்படும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்கலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது.

இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:
பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது.

இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:

       

ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.

மத்திம பலன்களை தரும் வகையில் இணைக்கக் கூடிய ஒரே நட்சத்திரங்கள்: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். ஆனால், மத்திமமான பொருத்தம்தான். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.

      

பொருத்தமுள்ள ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும் அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால், திருமணம் செய்யலாம்.
உதாரணமாக, ரோகிணி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.

பெண் நட்சத்திரப் பாதம் முதலிலும் ஆண் நட்சத்திரப் பாதம் பிந்தியதாகவும் இருந்தால், திருமணம் செய்வது சிறப்பான பலன் இல்லை. உதாரணமாக, திருவாதிரை நட்சத்திரம் என்றால், திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் பெண்ணுக்கும் இரண்டு மூன்று நான்கு பாதங்களில் ஏதாவதொரு பாதம் ஆணுக்கும் இருப்பது நற்பலன்களைக் கொடுக்காது.

27 வது நட்சத்திரம் திருமணம் செய்யலாமா?
 
பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் கணக்கிடும் போது 27 வது நட்சத்திரமாக வந்தால், பெண்ணின் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமும் ஒரே ராசியில், இருந்தாலும் திருமணப் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம் உத்தம பலன்கள் உண்டாகும்.
அப்படி அல்லாமல், இருவர் ராசியும் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இதற்கு தினப்பொருத்தம் இல்லை. நற்பலனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொதுவாக, இருவரும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ஒரே ராசியாக இருந்தாலும் சரி, மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஆயுளில் பாதகம் ஏற்படாது. பரஸ்பரம் அன்பு அதிகமாகவே இருக்கும். ஆனால், மற்ற மற்ற சௌகரியங்கள் குறையுடன் இருப்பதைக் காணலாம். 

ஒரே ராசியாகவோ ஒரே நட்சத்திரமாகவோ உள்ள தம்பதிக்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி வரும்போது இருவருக்கும் ஒன்றாகவே துன்பம் தரும். இதே போல குரு பகவானும் ஜென்ம குருவாகவும், அஷ்டம குருவாகவும் வரும்போதும் துன்பங்களையே தருவார். 
 
ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடைபெற்றால் பரவாயில்லை, மாறாக தசா புக்தியும் பாதகமாக வந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் கேள்வி. ஆதலால், இருவரும் வேறு வேறு ராசிகளில் பிறந்திருந்தால் அவர்களை இணைத்தோமேயானால் அவர்களில் யாராவது ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்து மற்றவருக்கு ஏழரைச்சனி இல்லாமல் இருந்தால் நன்மையைத் தரும்.

அதாவது ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டு இருக்கும்போது மற்றவருக்கு இன்பம் இருக்குமாயின் துன்பம் ஏற்பட்டவருக்கு உறுதுணையாக உடன் இருந்து உதவிபுரிய உதவுகிறது. 

அப்படி இல்லாமல் இருவருக்கும் துன்பம் ஏற்பட்டு இருக்குமாயின் யார் யாருக்கு உதவ முடியும். மீண்டும் சோகத்தையே அந்த தம்பதி தழுவவேண்டியதுதான்.

மனைவியையும், மடிக்கணினியையும் பார்த்துக்க 10 டிப்ஸ்


ஆபிஸ் செல்லும் ஆண்கள் பலருக்கு கம்ப்யூட்டர் தான் இப்போ முதல் மனைவி. மனைவியை விடவும் அதிகமாகக் கணினிகளோடுதான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. 'அடேய்.. அதெப்படி உயிரும் உணர்வுமான மனைவியை லேப்டாப்புடன் ஒப்பிடுவாய்' அப்படினு யு டர்ன் அடிச்சு, ரோப் இல்லாம காத்துல கரணம் போட்டு உங்க காலால என்னை எட்டி உதைக்கவெல்லாம் ட்ரை பண்ணாதீங்க.. திஸ் ஈஸ் ரொம்ப ஜாலி போஸ்ட். 'இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே'ன்னு ஸ்க்ரோலிங்ல ஓடறதா நெனைச்சுக்குங்க.

சீரியஸாக சிந்தித்து இதில் உள்ள நற்கருத்துக்களை நடுமண்டைக்குள் ஏற்றிக்கொள்வதும், படித்து முடித்தவுடன் மேலே வலது மூலையில் இருக்கும் X சிம்பலை க்ளிக்கி வெளியே செல்வதும் உங்க இஷ்டம் பாஸ்!

* லேப்டாப் வாங்குறப்போ 10 பேர்ல ஆரம்பிச்சு 100 பேர் வரைக்கும் விசாரிப்போம். எதை வாங்கினா நல்லாருக்கும்கிறதுதான் நம்ம அடிப்படைக் கேள்வி. எல்லாரும் அவனவன் வெச்சிருக்கிற லேப்டாப்பை குறை சொல்லிட்டு, வேஸ்டுங்க.. வேற ப்ராண்ட் வாங்குங்கம்பான். ஆனா அதை எப்பவும் தூக்கிட்டுத் திரிவான். வாங்குறப்போ ஐடியாஸ் கேட்கிறதெல்லாம் ஓகே. ஆனா மெயின்டெனென்ஸ் நாமதான் பண்ணியாகணும்கிறதை மறக்காதீங்க.

* லேப்டாப் போலவே மனைவிக்கும் சில டிஃபால்ட் செட்டிங்ஸ் உண்டு. அதை எந்தக் காரணம் கொண்டும் மாற்ற முயற்சிக்கக் கூடாது. ஹேங் ஆனா அப்புறம் ரொம்பக் கஷ்டம் பாஸ்!

* லேப்டாப்பை எப்பயுமே சார்ஜ்ல போட்டுட்டே இருக்கக் கூடாதாம். அதே மாதிரிதான் அன்போ, கோபமோ ஒரே உணர்ச்சியைக் காட்டிட்டே இருக்கக் கூடாது. அளவே நலம்னு 'வைஃபாலஜி' க்ளாஸ்ல சொல்லிக் கொடுத்திருப்பாங்க, அதை ஞாபகம் வெச்சுக்கணும்.

* லேப்டாப்பை பாதிக்கிறது, சார்ஜ்ல இருக்கிறப்போ வர்ற பவர் Fluctuations அப்படிம்பாங்க. அதே மாதிரிதான் அவங்க உணர்வுகள்லேயும் 'ஏற்ற இறக்கங்கள்' இருக்கும். அதை ரொம்ப கவனமா கையாள வேண்டியது அவசியம்!

* லேப்டாப் ப்ரைட்னஸ் கூட்டி வெச்சுக்கிட்டா க்ளியரா தெரியுது, அதே பொண்டாட்டி முகத்துல ப்ரைட்னஸைக் கூட்ட முயற்சி செஞ்சிருக்கீங்களா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

* தேவையில்லாத நேரத்துல ஆன் பண்ணினதை, அப்டியே ஸ்லீப் மோட்ல வெச்சீங்கன்னாலும் லேப்டாப் உள்ளே ஓடிட்டுதான் இருக்குமாம். நீங்க ஆபீஸ் வந்தபிறகும், மனைவிக்கு வேலை வைக்கிற மாதிரி ஒரு இடத்துல எடுத்ததை இன்னொரு இடத்துல வெச்சுட்டு வர்றது, நம்ம டேபிள், டீபாயை அலங்கோலமா வெச்சுட்டு வர்றதுன்னு பண்ணினீங்கன்னா, அவங்க ஓய்வெடுக்கவே முடியாது. பவர் ஷட் டவுன் பண்ணினாதான் லேப்டாப்புக்கு நீண்ட ஆயுள். அதே மாதிரி அவங்களுக்கும் அப்பப்போ ஓய்வெடுக்கணும்ல? என்ன நான் சொல்றது? (இதை என் பொண்டாட்டி மட்டும் படிக்கக் கூடாது ஆண்டவா!!)

                             

* லேப்டாப் வெச்சுக்கிற Bag ரொம்ப முக்கியம். மனைவி விஷயத்துல அவங்க அதிகமா இருக்கப்போற இடம்னு வெச்சுக்கலாம். வீடு & வெளியில் போகும்போது கார். இவை ரெண்டையும் கவனமா பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்து அதுல வெச்சு அவங்களை அழகு பார்க்கற கணவனுக்கு ஆல்வேஸ் ஹேப்பிதான்!

* அப்பப்போ லேப்டாப்பை அப்டேட் பண்ணச் சொல்லிக் கேட்கும். எதுக்குனு விட்டுடாம அப்டேட் பண்றோம்ல? அதே மாதிரி நாட்டு நடப்புகள், வீட்டு விஷயங்கள்ல அவங்க பார்வையைக் கேட்டு நாமளும் அப்டேட் ஆகிக்கலாம். நம்ம பார்வையை அவங்ககூடவும் பகிர்ந்துக்கலாம். புதிய பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவங்களையும் அப்டேட் ஆக்க மறக்கக் கூடாது! * இந்த பாயின்ட் ரொம்ப முக்கியம். தினமும் இரவு லேப்டாப்பை அணைச்சு வெச்சுக்கணுமாம். இதுக்கு விளக்கம் தேவையில்லைனு நினைக்கிறேன்!



அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... ஏன் மூன்று முடிச்சு போடனும்?



இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. நம்முடைய இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறி இருக்கிறார்.


சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் ஓர் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் என்ற பந்தத்தில்தான் தொடங்குகிறது. இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமையவேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன் - மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்கவேண்டும்.

சிறப்பு மிக்க கணவன் - மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

பெண் பார்க்கும் படலம்:

திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பிள்ளையின் மனம் முதலில் பெண்ணிடம் லயிக்கவேண்டும். விருப்பம் ஏற்படவேண்டும். இதுதான் முதல் படி. இந்த நிலையில் பிள்ளைக்கு பெண்ணையோ, பெண்ணுக்கு பிள்ளையையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. பிள்ளை வீட்டார்தான் முதலில் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து பெண் கேட்கவேண்டும். அனைத்து பொருத்தங்களும் முடிந்த பிறகு முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்படும்.

நிச்சயதார்த்தம்:

இல்லற வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு முன்னுரை போல் அமைந்திருப்பது நிச்சயதார்த்தம் என்னும் சடங்கு. நிச்சயதார்த்தத்தின்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்கள் அவர்களுடைய மணவாழ்க்கையை வளம் பெறச் செய்ய தேவர்களை அழைக்கும் மந்திரங்கள் ஆகும்.

'வருண பகவானே! எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என் உடன் பிறந்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதவளாக இருக்கட்டும்'
அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, 'இந்திர தேவனே! எனக்கு மனைவியாக வர இருப்பவள் தன்னுடைய பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பவளாக இருக்கட்டும்'

தொடர்ந்து சூரியபகவானைப் பார்த்து, ''இவள் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றவளாகத் திகழட்டும்'
பிறகு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, ''பெண்ணே! நீ அழகிய கனிவு நிரம்பிய கண்களை உடையவளாகவும், கணவனாகிய எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை அளிப்பவளாகவும், நல்ல மனம் உள்ளவளாகவும், தேஜஸ் நிரம்பப் பெற்றவளாகவும் திகழ்வாயாக. தீர்க்காயுள் உள்ள பிள்ளைகளைப் பெறுபவளாகவும், தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவளாகவும், அனைவருக்கும் நன்மையை செய்பவளாகவும் இருப்பாயாக'' என்ற பொருளுடைய மந்திரத்தைச் சொல்கிறான்.

இந்த மந்திரங்களைப் போலவே மற்ற அனைத்து திருமண மந்திரங்களும் அர்த்தம் உள்ளதாகத் திகழ்கின்றன.



காசி யாத்திரை:

வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும்போது, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான தூண்டுகோலாக அமைந்திருப்பதுதான் காசி யாத்திரை விஷயம். எதற்கெடுத்தாலும் நான் சந்நியாசியாகப் போய்விடுவேன் என்று சொல்லும் சஞ்சல மனம் ஆண்களுக்கே இயல்பானது. அப்படி மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதற்காகத்தான், ''வேண்டாம் இந்த துறவற மனோபாவம். இல்லறமே நல்லறம். அந்த நல்லறத்தில் நீ ஈடுபடுவதற்காக, நான் இதுவரை செல்லமாக வளர்த்த என் பெண்ணையே உனக்குத் தருகிறேன்'' என்று சொல்லும் நிகழ்ச்சிதான் காசி யாத்திரை. பிற்காலத்தில் கணவனுக்கு எப்போதேனும் மனச் சஞ்சலம் ஏற்படும்போது, இந்த காசி யாத்திரை வைபவத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறவேண்டும் என்பதற்காகவே காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கூறைப் புடைவை:

காசி யாத்திரை நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணுக்கு மணமகன் வீட்டு சார்பில் கூறைப் புடைவை கொடுக்கப்படும். கொடுக்கும்போது ஒரு மந்திரத்தை மணமகன் சொல்லவேண்டும். அந்த மந்திரத்தின் பொருள், ''என்னுடைய வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளே! இந்தப் புடைவை உன் மேனியைச் சுற்றி உன்னைப் பாதுகாப்பாகவும், உன் அழகைப் பராமரிக்கவும் பயன்படுவதைப் போலவே, தர்ம தேவதைகள் உன்னைச் சூழ்ந்திருந்து, உன் பண்பு, அழகு ஆகியவற்றையும் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்பதாகும்.

பெண்ணின் இடுப்பில் தர்ப்பையால் கட்டுதல்:

கூறைப்புடைவை அணிந்து வந்த பெண்ணின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றைக் கட்டுவார்கள். 'நல்ல மனம், குழந்தைகள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழும் தன்மை, ஆரோக்கியமான நல்ல உடல், இவற்றை வேண்டிப் பெற்றுக்கொண்டவளாகவும், கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவள் தூய்மையை உணர்த்தும் நெருப்பின் முன் நிற்கிறாள். இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்' என்பதே இதன் பொருள்.
தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் இதை அடுத்துச் சொல்லப்படுகிறது. மணப்பெண்ணை, சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதன் பின்னரே அவள் மணமகனுக்கு உரியவளாகிறாள்.

இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, 'தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளை எப்படி மனைவியாக ஏற்கலாம்?' என்று கேட்கத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல... ஒரு பெண்ணை சிறுவயதில் எத்தனையோ பேர் ஆசையாகத் தூக்கியிருப்பார்கள்... இதனாலெல்லாம் அந்தப் பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகிறதா என்ன?

ஒரு பெண்ணின் சரீரத்தில் ரோமம் உண்டாகும்போது சோமன் என்ற தேவன் அவளைப் பாதுகாக்கிறான். 'ரஜஸ்' ஏற்படும்போது (ருதுவாகுதல்) கந்தர்வன் அவளைப் பாதுகாக்கிறான். சோமதேவன் கன்னிப்பெண்ணுக்கு உடல் பலம் அளிப்பவன்; கந்தர்வன் அவளுக்கு அங்க அழகுகளை கொடுப்பவன்; அக்னி அவளுக்கு யௌவனத்தின் பிரகாசத்தைக் கொடுப்பவன். இவற்றைப் பெற்று, இந்த இயற்கை சக்திகளின் ஆசி உடலில் மேன்மையை அளித்த பிறகுதான், அவள் கணவனை அடைய முழுத்தகுதி பெறுகிறாள்.
அவ்வாறு அந்தப் பெண்ணைக் காத்து அருள்பாலித்த தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.

கன்னிகாதானம்:

தானங்களிலேயே மிகவும் உத்தமமான தானமாகப் போற்றப்படுவது கன்னிகாதானம். தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம். கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் தந்தை ஒரு மந்திரம் சொல்வார். அந்த மந்திரத்தின் பொருள்: "பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான திருநிறைச்செல்வா! 
 
உனக்குத் தானமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்.. என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் செய்திருக்கிறேன். இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள். எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக! உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக. உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!"



மாங்கல்யதாரணம்:

அடுத்து மாங்கல்யதாரணம் நிகழ்கிறது. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் காட்டும் அடையாளம் அது!

'மாங்கல்யம் தந்துநாநே' - என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த மந்திரத்தின் பொருள்: ''இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!'
அப்போது போடப்படும் 'மூன்று முடிச்சு'கள் அர்த்தபுஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் தங்கை மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள். ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். 

இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். அதுமட்டுமின்றி, உலகியல்படி, தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும் - திரிசுரணசுத்தியாக மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் - முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் - இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன.

சப்தபதி:

இதைத் தொடர்ந்து சப்தபதி என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சட்டங்கள் கூட இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த 'சப்தபதி' முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது.
மணமகளின் கால்கட்டை விரலைப் பற்றி, மணமகன் தன் வலது கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான். இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:

"ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் - பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்; நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் - பிறசெல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!" என்று இந்த நிகழ்ச்சியில் மணமகன் மணமகளை அழைக்கிறான். இந்த மந்திரத்திற்கு 'ஸகா' என்று பெயர். மனோதத்துவ அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்தும் இணைந்தும் வாழத் தயார் செய்து கொள்கிறார்கள் இந்த அர்த்தமுள்ள சடங்கில்!


அம்மி மிதிப்பது:
 
அடுத்த சடங்கு அம்மி மிதிப்பது. மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.

பொரியிடுதல்:
 
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் (லாஜ ஹோமம்). மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுத்து அக்னியில் இடச் செய்கிறாள். கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், புத்திசாலிகளான - ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவும், ஒளிமயமான சூரியதேவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதில் பிள்ளை வீட்டாரின் சகோதரர்களையும் ஈடுபடுத்துவது, இரு குடும்பங்களும் இணைவதை உணர்த்துகிறது.

 
அருந்ததி தரிசனம்:

அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி. நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் - சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் - இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.

60 வயதைத் தாண்டிய குழந்தைகளை எப்படி குஷிப்படுத்துவது?



“என் அம்மா எந்த நேரமும் எதையாவது பறிகொடுத்த மாதிரியே இருக்காங்க. எந்தக் குறையும் இல்லாமல் மரியாதையோடுதான் பார்த்துக்கிறேன். என்ன விஷயம்னு கேட்டாலும் சரியா பதில் சொல்றது இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியலை'' 

இந்த வசனத்தை உங்கள் அலுவலகத்திலோ, உறவிலோ கேட்டிருப்பீர்கள். ஏன் நீங்களேகூட சொல்லி இருப்பீர்கள். வேலைக்குச் செல்லும் ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும். இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் இருக்கும் பிரச்னைதான் இது. பொருளாதார தேவைக்காக கணவன், மனைவி இருவருமே உலகமயமாக்கல் வாகனத்தில் பரபரப்புடன் பயணித்துக்கொண்டிருக்கிறோம். 
இதில், 60 வயதைத் தாண்டிய முதியவர்கள்... குறிப்பாக அம்மாக்கள், வீட்டின் அறிவிக்கப்படாத காவலாளிகளாக, நம் வீட்டின் உள்பக்க பூட்டுகளாக, பள்ளி முடிந்துவரும் நம் குழந்தைகளைக் கவனிக்கும் ஆயாக்களாக ஆகிவிட்டார்கள். வேலை முடிந்து அலுப்புடன் வரும் நமக்கு, அவர்களின் விட்டேத்தியான முகம், மேலும் அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்குகிறது. எரிச்சலுடன் நகர்ந்துவிடுகிறோம். ஆனால், சில நிமிடங்கள் 'போகன்' அரவிந்த்சாமியாக அந்த முதிய குழந்தைகளுக்குள் சென்றுவந்தால், அவர்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம். அந்தக் குழந்தைகளைக் குஷிப்படுத்த சின்னச் சின்னதாக சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்!

* காலையில் டிபன் செய்வதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். 'ஏதாவது செய்' என்று அவர்கள் சலிப்புடன் சொன்னாலும், நீங்கள் முகத்தைத் திருப்பிவிடாமல் தொடர்ந்து கேளுங்கள். சில நாட்கள் அவர்களைப் பிரதான சமையல்காரராக்கி, நீங்கள் அவர்களுக்கு உதவியாளராக மாறுங்கள். இதில், குழந்தைகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். உதவி என்கிற பெயரில் குழந்தைகள் செய்யும் க்யூட்டான அசட்டுத்தனங்கள், அந்த இடத்தை கலகலப்பாக்கும்.

* பொருளாதார ரீதியாக நம்மைச் சார்ந்திருப்பதே, அவர்களை அதிகம் பாதிக்கிறது. வீட்டிலேயே இருந்து செய்யும் வகையிலான சிறிய கைத்தொழிலை உருவாக்கிக் கொடுங்கள். மருந்துக் கடைகளுக்கான காகிதப் பை, ஊறுகாய், வற்றல் தயாரிப்பு என எதுவாகவும் இருக்கலாம். வீட்டுக்கு அருகில் இருக்கும் தெரிந்த கடைகளில் கொடுத்து, மிகக் குறைந்த வருவாய் கிடைத்தாலும் போதும். நமக்குத்தான் அது சாதாரணம்; அவர்களுக்கு பெரும் பலம். ஓய்வு நேரத்தில் நீங்களும் அந்த வேலையில் உதவுங்கள். உங்களுக்கும் ஒரு ரிலாக்ஸாக இருக்கும்.

* அவர்களது இளம் வயதில் அதிகம் சினிமா பார்த்தவராக இருந்திருக்கலாம். வயது காரணமாகவும், இன்றைய சினிமாக்கள் பிடிக்காததாலும் அதில் ஆர்வம் போய்விட்டிருக்கும். அவர்கள் பார்த்து ரசித்த படங்களின் டிவிடி-க்களை வாங்கிவந்து கொடுங்கள். சற்று நேரமாவது அவர்களோடு சேர்ந்து பார்த்து, அந்தப் படங்கள் வந்த நேரத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைக் கேளுங்கள். அந்தப் படத்தில் வரும் நடிகர், நடிகைகள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், அவர்கள் மூலமாக அப்போதுதான் கேள்விப்படுவது போலக் கேட்டுக்கொள்ளுங்கள்.

* வயதாகிவிட்டது, தனியாக அனுப்பினால் சமாளிப்பாரா என்றெல்லாம் ரொம்பவும் பயப்படாமல், சில இடங்களுக்குத் தனியாக அனுப்புங்கள். அவர் வயதுடைய அக்கம்பக்கம் அம்மாக்களோடு சேர்ந்து பிக்னிக், நிகழ்ச்சிகள் என வெளியே சென்று வரட்டும். திரும்பிய பிறகு, நடந்த விஷயங்களைப் பத்து நிமிடங்கள் ஒதுக்கிக் கேளுங்கள். நீங்கள் கேட்கப்போவது... அவர்கள் ஆட்டோக்காரரிடம் சாமர்த்தியமாகப் பேசியது, இடத்தைச் சரியாக கண்டுபிடித்தது என அவர்களின் திறமையை வெளிப்படுத்துவது போல இருக்க வேண்டும்.

* கோயில், உறவினர் நிகழ்ச்சிகள் என அவர்களுடன் செல்லும்போது, அந்த இடங்கள் பற்றி அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்பது போல நிறைய சந்தேகங்களைக் கேளுங்கள். உதாரணமாக... 'தேவர்கள் பார்க் கடலை கடைஞ்சப்போ' என்றோ, 'சைதாப்பேட்டையில முன்னாடி எல்லா வெளியூர் பஸ்ஸூம் வரும்' என்றோ சொல்வதை, வியப்புடன் கேட்டுக்கொண்டு அவரை மேதாவி ஆக்குங்கள்.

* சின்ன வயதில் நீங்கள் செய்த அசட்டுத்தனங்கள், அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட விஷயங்கள், உங்களை அன்புடன் கவனித்துக்கொண்ட தருணங்கள் ஆகியவற்றை, உங்கள் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுங்கள்.

* இரவு நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிடும்போது இன்றைய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இனிமையான விஷயங்களைப் பேசுங்கள். அல்லது அவர்கள் குடும்ப தலைவியாக இருந்தபோது சந்தித்த சவால்களைப் பற்றி பேசுங்கள்.

மொத்தத்தில், நம் குழந்தைகளின் அறிவாற்றலை பாராட்டுவது, ரசிப்பது போல இந்த 60 வயது தாண்டிய குழந்தைகளின் அறிவாற்றலையும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி ரசியுங்கள். எல்லோருக்குமே, தாங்கள் மற்றவர்களைவிட ஒரு படி மேலே என நினைப்பது பிடிக்கும். அந்த நினைப்பை எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், உங்களின் தாய் உங்களைவிட ஒரு படி மேலேதான்.

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!



வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

 


`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.

1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு!

இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

2. பொன் மகன் பொது வைப்பு நிதி!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

3. தொடர் வைப்புக் கணக்கு!
மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.

4. கால வைப்புக் கணக்கு!

குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!

அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

6. மாதாந்திர வருமானத் திட்டம்!

நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம்.

7. தேசிய சேமிப்புப் பத்திரம்!

வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.

8. கிஸான் விகாஸ் பத்திரம்!

112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. `அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். 
 
எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

Monday, March 20, 2017

தண்ணீர் சேமிக்க வாஷிங் மெஷினை முழுதாக நிரப்புங்கள்... ஷவரில் குளியுங்கள்!



நீர் நிலைகளில் நிறைந்திருந்த தண்ணீரை உறிஞ்சியதோடு அல்லாமல், உடலின் வியர்வைத் துளிகளையும் கூட தாகத்துடன் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது சூரியன். வெயில் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்னை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீர் தான், நாளை நம் தாகத்தை தீர்க்கப்போகிறது. 
 
தண்ணீர் சேமிக்க அரசாங்கம் சரியான திட்டங்களை இடவில்லை, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடவில்லை, முல்லைப் பெரியாரின் தண்ணீரை கேரளா மறித்துவிட்டது, இயற்கையே மாறிவிட்டது, மழையில்லை, தண்ணீருக்கு என்ன செய்ய? என நம் கை மீறிய பல விஷயங்களை மட்டுமே குறை சொல்லாமல், ஒரு தனி மனிதனாக , சின்ன சின்ன செயல்பாடுகளின் மூலம் எப்படி தண்ணீரை சேமிக்கலாம் என்பதை நாம் எண்ணி, செயல்பட வேண்டிய தருணம் இது.

   

ஒரு லிட்டருக்கு, ஒரு லிட்டர் வீண்:

இன்றைய நகர வீடுகளில் பெரும்பாலும், "ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்" (Reverse Osmosis) என்று சொல்லக்கூடிய ஆர் தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறோம். குடிப்பதற்கும், சமையலுக்கும் இதைத் தான் பயன்படுத்துகிறோம். ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரை கொடுக்க ஒரு லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது இந்த தொழில்நுட்பம். வெளியேற்றப்படும் தண்ணீரிலிருக்கும் பாக்டீரியாக்கள், காற்று பட்டவுடன் அரை மணி நேரத்தில் அழிந்துவிடும். இப்படி வெளியேறும் அந்த நீரை வீணாக்காமல், ஒரு பக்கெட்டில் பிடித்து வைத்து வீடு துடைப்பது, பாத்ரூமுக்கு உபயோகப்படுத்துவது போன்ற விஷயங்களை செய்யலாம்.

     



பாத்திரம் கழுவும் போது தண்ணீர் பத்திரம்:

பாத்திரம் கழுவும் போது குழாயைத் திறந்து தண்ணீர் உபயோகிப்பதை தவிர்க்கலாம். ஓடும் தண்ணீரை உபயோகிப்பதை தவிர்ப்பதன் மூலம் பெருமளவிற்கான தண்ணீரை சேகரிக்க முடியும். மாறாக, பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி வைத்து, அதிலிருந்து எடுத்து கழுவலாம். அதே போன்று, குளிப்பதற்கு ஷவர் உபயோகிப்பதும் தண்ணீர் வீணாக இரைவதை தடுக்கும்.

                            

வாஷிங் மெஷினை முழுதாக நிரப்புங்கள்:

வாஷிங் மெஷினில் துணியைப் போடும் போது, அதன் முழு கொள்ளளவிற்கு துணிகளைப் போடுவது நல்லது. குறைவாக போட்டாலும், நிறைத்துப் போட்டாலும் ஒரே அளவிற்கான நீரைத் தான் வாஷிங் மெஷின்கள் எடுத்துக் கொள்ளும். வாஷிங் மெஷினை "டிரெய்ன்" செய்யும் போது வெளியேறும் சோப் தண்ணீரை வீணாக பாத்ரூமில் விடுவதைக் காட்டிலும், எண்ணெய் பிசகு வாய்ந்த சமையல் பாத்திரங்களை அதில் ஊறவைக்கலாம்.

                              

தண்ணீரை சுத்தமாக்கும் படிகாரம்:


போரில் (Bore) தண்ணீர் குறைந்தாலோ, தண்ணீர் தொட்டியில் அழுக்குப் படிந்திருந்தாலோ, குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். இதை நாம் உபயோகப்படுத்தாமல் தண்ணீரை வீணாக்குவோம். அதற்கு மாற்றாக, இது போன்ற கலங்கல் நீரை பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரக் கல்லை பக்கெட்டில் போடுங்கள். தண்ணீரை கைகளால் சுழற்றியபடி படிகாரக் கல்லை கரையுங்கள். 15 நிமிடங்களில் அழுக்கு கீழே படிந்து, தெளிவான நீர் கிடைக்கும்.

    
இந்த விஷயங்களை செய்ய அதிக பணமோ, நேரமோ செலவாகாது. ஆனால், இதன் மூலம் நாம் சேமிக்கும் தண்ணீர் விலைமதிப்பற்றதாக இருக்கும்.

Saturday, March 18, 2017

உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!



உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையைக் குறைக்க பலரும் கடுமையான டயட்டை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் பல நேரங்களில் சரியாக சாப்பிடாமல், பசியில் வாடுவார்கள். உடல் எடையைக் குறைக்க சாப்பிடாமல் இருந்தால் மட்டும் போதாது.

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். சிலர் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால் இரவு உணவு மிகவும் இன்றியமையாதது. பசியுடனேயே இருந்தால், அல்சர் தான் வரும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை, உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

க்ரீக் தயிர்

இதில் புரோட்டீன் அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்கும் மற்றும் தூங்கும் போது தசைகள் மெலிவடைய உதவும்.

செர்ரி பழங்கள்

செர்ரி பழங்களில் மெலடோனின் என்னும் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோன் உள்ளது. ஆகுவே இப்பழத்தை உட்கொண்டால், இரவில் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும்.

வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் முழு தானிய பிரட்

வேர்க்கடலை வெண்ணெயில் ட்ரிப்டோஃபேன் என்னும் தூக்கத்திற்கு உதவும் அமினோ அமிலம் உள்ளது. முழு தானிய பிரட்டில் வைட்டமின் பி உள்ளது. இவை வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

புரோட்டீன் ஷேக்

மாலையில் உடற்பயிற்சி செய்து சோர்வடைந்துள்ள உடலைப் புதுப்பிக்க புரோட்டீன் ஷேக் உதவும். எனவே இந்த புரோட்டீன் ஷேக்கை கூட இரவில் குடிக்கலாம்.

காட்டேஜ் சீஸ்

இந்த சீஸில் கேஸின் என்னும் புரோட்டீன் உள்ளது. இது மெதுவாக உடலில் வெளியிடப்படும். இது வயிற்றை நிரப்புவதோடு, தூக்கத்தின் போது தசைகளை சரிசெய்யவும் உதவும். முக்கியமாக இந்த சீஸ் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

வான்கோழி

வான்கோழியை இரவில் சாப்பிட்டால், இரவில் நல்ல தூக்கம் வருவதோடு, ஆரோக்கியமான வழியில் தசைகளை மெருகேற்றும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலம் இரவில் வேகமாக தூங்க உதவும் மற்றும் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும். முக்கியமாக இந்த பழத்தை இரவில் சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும்.

சாக்லேட் மில்க்

சாக்லேட் மில்க் உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் ஒன்று. இதில் உள்ள கால்சியம், கொழுப்புக்களைக் கரைக்க உதவும். மேலும் இதில் உள்ள புரோட்டீன் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

பாதாம்

பாதாமை இரவு நேரத்தில் சாப்பிட்டால், தசைகள் இரவில் சரிசெய்யப்படும் மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து பசி எடுக்காமல் தடுக்கும். முக்கியமாக பாதாம் உடல் எடையைக் குறைக்க உதவும் சூப்பர் உணவுகளில் ஒன்றாகும்.

குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்...

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதலின் படி ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கிராமிற்கு குறையாமல் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு நாம் குறிபிட்டளவு உப்பு சேர்க்கத் தவறினால் அது நமது இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமாம்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதலின் படி ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கிராமிற்கு குறையாமல் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனினும், கனடா ஆராய்ச்சியாளர்கள் அந்த அளவு போதுமானது இல்லை என்றும், அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், மதிநுட்பமானது அதிக அளவு உப்பு உடலுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கும் என்று கருதுகிறது.
  
இதயம் 

சலிம் யூசுஃப் என்னும் கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது, " குறைவான உப்பு எடுத்துக்கொள்வது உடலுக்குத் தீங்கையே விளைவிக்கும். ஒரு நாளைக்கு 3 கிராமுக்கு குறைவாக சோடியம் எடுத்துக் கொண்டால் இதய செயலிழப்பு, திடீர் மரணம், மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது", இவ்வாறு கூறியிருக்கிறார்.
யூசுஃப் கூறுகிறார், உப்பின் அளவை குறைப்பதால் உடலின் உள்ள இயற்கையான சமநிலைகளும் குறைந்துக் கொண்டே வருகின்றது என்று.

குறைந்த உப்பு 
குறைந்த அளவு உப்பை உட்கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி உலக வர்த்தக மையம், உயர் இரத்த அழுத்த ஐரோப்பிய சமூகம் மற்றும் ஐரோப்பிய பொது சுகாதார சங்கத்தின் கூட்டு செயற்பாட்டுக் குழுவின் மூலம் ஐரோப்பிய இதய இதழில் வெளியான ஒரு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு

மேலும் இந்த அறிக்கையில், " நாள் ஒன்றுக்கு 2.3 கிராம் சோடியமுக்கும் குறைவாக எடுத்துக் கொள்ளுவது என்பது சாத்தியம் இல்லை. மேலும் இது நல்லது மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை" என்றும் கூறப்பட்டுள்ளது.

அளவு

இதற்கு மாறாக யூசுஃப் இதைப் பற்றி விரிவாக கூறியது என்னவென்றால், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 7.5 கிராமில் இருந்து 12.5 கிராம் வரை உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இது 3 முதல் 5 கிராம் சொடியமிற்கு சமம் என்றும் விவரித்துள்ளார்.

சரியான அளவில்

எனவே, உப்பினை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ எடுத்துக்கொள்ளாமல் சரியான போதுமான அளவில் மட்டும் எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்.

ஏன் முளைவிட்ட தானியங்களை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?




முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும் இன்னும் மக்கள் அதை தினசரி உணவாகப் பயன்படுத்துவதில்லை. இப்போதுதான் ஜிம்மில் செல்பவர்கள், டயட் இருப்பவர்கள் என சிறிது உண்ணத் தொடங்குகிறோம். இருப்பினும் தினசரி உணவுகளில் இதனை சாப்பிடாமல் இருப்பது கவலைக்குரியதே.

பழைய காலங்களில் முளைவிட்ட பயறு வகைகள், தினசரி உணவின் ஒரு பாகமாக இருந்தது.மனிதன் சாப்பிடும் உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது.

ஆயுள் நீடிப்பு :

ஒருவரின் வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மைகொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் மிக அதிகமாக உள்ளது. உடல் தளர்ந்துபோன நிலையில், என்சைம்ஸ் நிறைந்த முளைவிட்ட பயிரைச் சாப்பிடும்போது புத்துணர்ச்சி பிறக்கிறது. முளைவிட்ட தானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.

விட்டமின் சி 

ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளைவிடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில் வைட்டமின் சி, அறுநூறு சதவிகிதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின்சி' அளவைவிட இது அதிகம்.

பச்சைப்பயிறு 

மற்ற முளைவிட்ட தானியங்களைவிட, முளைவிட்ட பச்சைப்பயிறுக்கு வயிற்றில் அதிக வாய்வை உண்டாக்காத தன்மை கொண்டது.
இதனால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி ஆகியவை மட்டுமல்ல, அளவற்ற வைட்டமின் சி-யும் நிறைந்தது.

நொதிகள்

பச்சைப்பயிறு முளைவிடாதபோது, அதில் உள்ள ட்ரிப்சின், புரதத்தை ஜீரணம் செய்யும் என்சைம்களைத் தடை செய்கிறது.

அதுவே, பயறு முளைவிட்டதும் அதில் உள்ள ட்ரிப்சின் (trypsin) குறைகிறது. முளைவிட்ட பயிரை வேகவைக்கும்போது, ட்ரிப்சின் முற்றிலும் நீங்கிவிடுகிறது. வேகவைப்பதால், இதில் உள்ள புரதச் சத்து குறைவதில்லை.

சாலட் :
முளைவிட்ட தானியத்தைத் தயார் செய்ய, தண்ணீரும் காற்றுமே போதுமானது. தானியத்தை நீரில் ஊறவைத்தால், அரை நாளில் அவை முளைவிடத் தொடங்கும். இதனை நறுக்குவதோ, தோல் சீவுவதோ அவசியமில்லை.

பிறகு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். இதைக்கொண்டு எளிதில் தயாரிக்கப்படும் சாலட் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்

ஆரோக்கியம் :

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் குக்கிராமங்கள் வரை, முளைவிட்ட பயிறு எளிதில் கிடைக்கும். மற்ற உணவுகளைவிட மிகக் குறைந்த விலையில் கிடைத்தாலும், தனது சத்துக்களால் அனைத்தையும்விட மிக அதிக அளவில் சிறப்பாக இருக்கின்றன முளைவிட்ட தானியங்கள்!